அகமதாபாத், ஜன. 22 - கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், தங்களின் குடும்பத் தேவைகளை சமாளிப்பதற்கு பணமில்லாமல், குஜராத் மக்கள் தங்களிடம் இருந்த சுமார் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை உலக தங்க கவுன்சில் (The World Gold Council -WGC) வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, குறிப்பாக மருத்துவ அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏராளமான குஜராத் மக்கள் தங்களுடைய சேமிப்பான தங்கத்தை விற்கும் முடிவுக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்றுப் பரவல் - பொதுமுடக்கம் துவங்கிய 2020 மார்ச் முதல் சுமார் 28 மெட்ரிக் டன் தங்கம் குஜராத் மாநிலத்தில் மக்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் முதல் டிசம்பர் 2021 வரையிலான தொற்றுநோய் காலத்தில் இந்தியாவில் மொத்தம் 142 மெட்ரிக் டன் தங்கம் உருக்கப்பட்டுள்ள நிலையில், இதில், 20 சதவிகிதமான தங்கம் குஜராத்தில் மட்டும் உருக்கப்பட்டுள்ளது. ‘தொற்றுநோய் ஆண்டு 2020’ ஆனது, தங்கம் உருக்குதலில் ஒரு வேகத்தைக் கண்டது. 2021-இல்தான் இந்த போக்கு குறைந்தது. சுமார் 15 சதவிகிதம் சரிவைக் கண்டது. உண்மையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தங்க மறுசுழற்சி இந்தியாவில் வெகுவாக 22 சதவிகிதம் வரை குறைந்துள்ளது” என்று உலக தங்க கவுன்சில் (WGC) வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார மீட்சியானது சீரானதாக இல்லை இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) இயக்குநர் ஹரேஷ் ஆச்சார்யா தெரிவித்து உள்ளார். “தொற்றுநோய்க்குப் பிறகு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இரண்டிலும் மீட்சி வளைந்துள்ளது என்று தெரிவித்துள்ளதுடன், ஐடி மற்றும் இ-காமர்ஸ் போன்ற சில துறைகளில், வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இருப்பினும், வேறு சில உற்பத்தித் துறைகளில், வணிக இடையூறுகளால் மக்களின் வருமானம் இன்னும் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை. பல சிறு வியாபாரிகள் கடையை மூடுவதற்கு அல்லது மாற்று வருமான ஆதாரங்களைக் கண்டறியும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்றும் ஹரேஷ் ஆச்சார்யா வேதனை தெரிவித்து உள்ளார். உலக தங்க கவுன்சிலின் (WGC) இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், “தங்கத்தை மறுசுழற்சி செய்வது இந்தியாவில் 15 சதவிகிதம் அதிகரிப்பைக் கண்டது, ஏனெனில் மக்கள் தங்கள் பணம் மற்றும் மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினர்.
உண்மையில், தங்கத்தின் விலை உயர்வு, தங்கத்தை விற்றுத் தங்கள் லாபத்தையும் பதிவு செய்யத் தூண்டியது. இருப்பினும், கடந்த இரண்டு காலாண்டுகளில் தங்கத்தை உருக்குவது கணிசமாக குறைந்துள்ளது; இது கடந்த 2021-22 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் 2021 வரை 33 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். “இந்தியாவில் உள்ள மக்கள் தங்கத்தின் மீது ஒரு உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளனர், பலர் அதை விற்க விரும்புவதில்லை, மாறாக கடனுக்கு அடமானம் வைத்துள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல தங்கம் விற்பனை குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆச்சார்யா, “கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, பல வியாபாரிகள் தாங்கள் பெற்ற கடன்களை அடைக்க அல்லது வீட்டுச் செலவுகள் மற்றும் அவசரச் செலவுகளைச் சமாளிக்க, இதுபோன்று தங்கத்தை விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையின் போது பல குடும்பங்கள் தங்களது ஒருநேர உணவைக் கூட இழந்தனர். இதை சமாளிக்க கிராமப்புறங்களில் பலர் தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த தங்கத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.